திருப்பதி கோவிந்தராஜ சாமி கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான திங்கள்கிழமை, உற்சவர் கோவிந்தராஜர் ராம அவதாரத்தில் அனுமந்த வாகனத்தில் பவனி வந்தார்.
திங்கள்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணிவரை அனுமந்த வாகன சேவை நடைபெற்றது. இதனைக் காண மாடவீதியில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.
திருமஞ்சனம்: மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க காலை 9.30 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர், மாலை 4 மணி முதல் 5 மணி வரை வசந்தோற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாட வீதியில் உற்சவர் கோவிந்தராஜர், தன் உபய நாச்சியார்களுடன் தங்கப் பல்லக்கில் பவனி வந்தார்.
இரவு 8 மணி முதல் 9.30 மணிவரை யானை வாகன சேவை நடைபெற்றது. இதில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன்னும், பின்னும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.