பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள திரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவணியாபுரம் திரெளபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், செங்கம் மேல்பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தியின் மகாபாரத சொற்பொழிவும் நடைபெற்று வருகிறது. மேலும், மகாபாரத நாடகமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் திரெளபதி அம்மனுக்கு விரதமிருந்து தபசு மரத்தை சுற்றி அர்ச்சுனன் வழங்கிய எலுமிச்சை, வில்வம் பூ ஆகியவற்றை சேலையின் முந்தானையைக் கொண்டு பயபக்தியுடன் பெற்றனர். கடந்த ஆண்டு தபசு மரம் நிகழ்ச்சியில் பங்கேற்று, பின்னர் குழந்தை பாக்கியம் பெற்ற பெண்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.