விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்மலையனூரில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை சிறப்பு அலங்காரம் ஆகியவை நடைபெற்றது.
பின்னர், இரவு 11.30 மணி அளவில் மேள தாளம் முழங்க, மல்லி, முல்லை, சாமந்தி, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மன் அன்னப்பறவை மீது அமர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருளினார்.
அப்போது, கோயில் பூசாரிகள் அம்மனுக்கு தாலாட்டுப் பாடலை பாடி தீபாராதனை செய்தனர். கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை, தேங்காயில் கற்பூரம் ஏற்றி அம்மனை வணங்கினர்.
ஊஞ்சல் உற்சவத்தில் புதுச்சேரி, பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், கோயில் பூஜாரிகள் செய்திருந்தனர்.
பாதுகாப்புப் பணியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டிருந்தனர்.