சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. நாளை ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்ச தரிசன உற்சவம் கடந்த ஜூன் 21}ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றன. 27}ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலாவும், 28}ம் தேதி புதன்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை (ஜூன் 29) நடைபெறுகிறது. சித்சபையில் வீற்றுள்ள நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித்தனி தேர்களில் வீதிவலம் வருகின்றனர். பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்பு பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
ஜூலை 1}ஆம் தேதி சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.