மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் பங்குனி மாத கோடை வசந்த உற்சவம், இம்மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான என். நடராஜன் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருக்கோயிலின் கோடை வசந்த உற்சவம், இம்மாதம் 31ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் இந்த வசந்த உற்சவத்தில், சுவாமி உத்திரம் புறப்பாடும் நிறைவு நாளன்று நடைபெறுகிறது.
பங்குனி உத்திரமான ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி செல்லூர், வைகை வடகரையில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோயிலுக்கு எழுந்தருள்கிறார்.
அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெறும். தீபாராதனை நடந்து பக்தர்கள் தரிசனத்துக்குப் பின்னர் மாலையில் சுவாமி அங்கிருந்து வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் மரவர்ண சப்பரத்திலும் எழுந்தருளி திருக்கோயிலை வந்தடைவர்.
திருக்கோயில் சுவாமி சன்னதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாத பிட்சாடணம் பூஜை நடைபெறும். தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி, அம்மன் சேர்த்தியாவர். உற்சவ நாள்களான மார்ச் 31ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை திருக்கோயில் சார்பிலோ, உபயதாரர்கள் சார்பிலோ அம்மன், சுவாமிக்கு தங்க ரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் எதுவும் பதிவு செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.