அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத சனி பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கத்தில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றதும், இரு கருவறைகளைக் கொண்டு அருளாட்சி புரிவதுமான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயில் உள்ளது. திருத்தொண்ட மண்டலத்தின் முக்கிய சிவாலயங்களில் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலில் பங்குனி மாத பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 4 மணிக்கு கோயில் வளாகத்தில் கருவறை முன்புறம் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை அர்ச்சகர் சங்கர் சிவாச்சாரியார் செய்தார். மாலை 5.10 மணிக்கு மகா கற்பூர தீபாரதனை நடைபெற்றது.
இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட ரிஷிப வாகனத்தில் இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரர் மேளதாளத்துடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.