திருமலையில் ரூ. 20 கோடி செலவில் ஆக்டோபஸ் அதிரடிபடைப் பிரிவு அலுவலகம் அமைக்க ஆந்திர அரசு அனுமதி வழங்க உள்ளது.
திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் இங்கு ஆக்டோபஸ், கிரேஹவுண்ட்ஸ், ஊர்க்காவல் படை, மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு அகற்றும் பிரிவு, அதிரடி
படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஆக்டோபஸ் படையினருக்கு திருமலையில் பேஸ் கேம்ப் அமைக்க தேவஸ்தானம் பாபவிநாசம் சோதனைச் சாவடி அருகில் 1.60 ஏக்கர் இடம் ஒதுக்கியது. இதற்கு கடந்த 16-ஆம் தேதி ஆந்திர அரசு அனுமதி வழங்கியது. ஆக்டோபஸ் கேம்ப் ஏற்படுத்த ரூ. 20 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. அதில் ரூ.5 கோடியை தேவஸ்தானம் அளிக்க முன் வந்துள்ளது. மீதம் உள்ள நிதியை ஆந்திர அரசு வழங்க உள்ளது. ஆக்டோபஸ் கேம்ப்பில் தலைமை அலுவலகம், ஊழியர் குடியிருப்புகள், மோப்ப நாய்கள் பாதுகாக்கும் அறை, பயிற்சி மைதானம் உள்ளிட்டவை அதிநவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.