காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரத்தைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத சிவ தலங்களில் வாயு தலமான காளஹஸ்தி சிவன் கோயிலில் பிப்ரவரி மாதம் 141 அடி உயர புதிய ராஜகோபுரம் திறக்கப்பட்டது.
இந்த கோபுரத்தைச் சுற்றியுள்ள காலி இடம் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டது. அங்கு நிறுத்தப்படும் வாகனங்கள், ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக கோபுரத்தின் மீது மோதியதில் சில சிற்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த, கோயில் நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் கடந்த 2 நாளுக்கு முன் சன்னதி தெருவில் வசிக்கும் சீனிவாசலு என்பவர் ராஜகோபுரத்தின் மேல் ஏற முயன்று கை வழுக்கி கீழே விழுந்தார்.
கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க கோயில் நிர்வாகம் ராஜகோபுரத்தைச் சுற்றி அதன் கீழ்ப் பகுதியில் இரும்பு வேலி அமைத்துள்ளது.