திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள பத்மாவதி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள பத்மாவதி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் அர்ச்சகர் பத்மநாப ஐயர் அண்மையில் ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு அபிஷேகம், ஆராதனை செய்துவிட்டு, பின்னர் அருகே உள்ள பத்மாவதி அம்மன் சன்னதிக்கு சென்று ஆராதனை செய்து மீண்டும் ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதிக்கு திரும்பினார்.
அப்போது, அங்கு இருந்த அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன கிருஷ்ணர் சிலை காணாமல் போயிருந்தது தெரிய வந்ததாம். இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில், ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.