பிரசித்தி பெற்ற மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர் திருக்கோயிலில், வைகாசி விசாகப் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
மதுராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது மதுராந்தகம் கடப்பேரியில் அமைந்துள்ள மீனாட்சி சமேத வெண்காட்டீஸ்வரர் திருக்கோயில்.
இங்கு வைகாசி விசாகப் பிரம்மோற்சவம் திங்கள்கிழமை வேதமந்திரங்கள் முழங்க இடபக் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, கேடயம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி புறப்பாடு,திருமுலைப்பால் நிகழ்ச்சி, பூத வாகனம், சிம்மம், யானை, யாளி போன்ற பல்வேறு வாகனங்களில் உற்சவமூர்த்திகள் திருவீதி யுலா வந்து அருள்பாலிக்கின்றனர்.
இதன் முக்கிய நிகழ்வாக ஜூன் 2-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் ஆய்வாளர் இரா.கலைச்செல்வி, செயல் அலுவலர் ந.தியாகராஜன், கடப்பேரி பிரதோஷ வழிபாட்டுமன்றம், நால்வர் உழவாரப் பணிக் குழுவினர் செய்துள்ளனர்.