திருமலையில் உள்ள நீர்த் தேக்கங்களில் கங்கா பூஜை விமரிசையாக நடைபெற்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலையில் கோகர்பம், ஆகாசகங்கை, பாபவிநாசம், குமரதார பசுப்புதாரா என்ற 5 நீர்த் தேக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. மழைக் காலத்தில் திருமலையில் பெய்யும் மழைநீர் இந்த நீர்த் தேக்கங்களில் சேகரிக்கப்படுகிறது. இதில் உள்ள நீர் திருமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோயில் பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வருகிறது. மழைக் காலத்தில் இந்த நீர்த் தேக்கங்கள் அனைத்தும் தன் கொள்ளளவை எட்டிய உடன், தேவஸ்தானம் அவற்றுக்கு கங்கா பூஜை செய்வது வழக்கம். அதன்படி, தற்போது திருமலை மற்றும் சேஷாசல வனப்பகுதியில் பெய்த கனமழையால் நீர்த் தேக்கங்கள் வழக்கத்துக்கு முன்பாகவே தனது கொள்ளளவை எட்டின.
அதனால் தேவஸ்தான அதிகாரிகள் வியாழக்கிழமை அனைத்து நீர்த் தேக்கங்களுக்கும் கங்காபூஜை செய்தனர். அதற்காக அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்த குழு மங்கள வாத்தியங்களுடன் நீர்த் தேக்கங்களுக்கு சென்றது. அங்கு மஞ்சள், குங்குமம், மலர்கள் உள்ளிட்டவற்றை தூவி கற்பூர ஆரத்தி காண்பித்து, கலசம் வைத்து பூஜை செய்தனர். பின்னர், கலச நீரானது, நீர்த் தேக்கத்தில் ஊற்றப்பட்டது. இதில் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால், செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.