திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாள் நாளான வெள்ளிக்கிழமை காலை வெண் முத்துப்பந்தல் வாகனத்தில் உற்சவர் பவனி வந்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் சிறப்பாக நடத்தி வருகிறது. அதன்படி புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தாயார் பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கியது. அதன் 3- ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை பத்மாவதி தாயார் உறியில் வெண்ணெய் திருடும் கிருஷ்ணன் அவதாரத்தில் தலையில் மயில்பீலி அணிந்து வெண்மையான குளிர் முத்துக்களால் ஆன முந்துப்பந்தல் வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.
பின்னர் மாடவீதியில் பவனி வந்த களைப்பைப் போக்க தாயாருக்கு ஸ்ரீகிருஷ்ணசுவாமி மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிர், தேன், பழரசங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம், மூலிகை கலந்த வெந்நீர் உள்ளிட்டவற்றால் அர்ச்சகர்கள் திருமஞ்சனத்தை நடத்தினர். அப்போது பல்வேறு உலர்பழங்களால் ஆன மாலைகள், கீரிடம் உள்ளிட்டவை தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. மாலை 5.30 மணிக்கு 1008 விளக்குகளுக்கு இடையில் ஊஞ்சல் சேவை கண்டருளினார்.
சிம்ம வாகனத்தில் திருவீதியுலா
இரவு 8 மணி முதல் 10 மணி வரை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. ஐஸ்வர்யம், வீரம், ஞானம், வைராக்கியம் உள்ளிட்ட குணங்களின் வடிவமாக கருதப்படும் சிம்மத்தின் மேல் அவை அனைத்தையும் அருளும் பராசக்தியாக தாயார் மாடவீதியில் பவனி வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டு தாயாரை வழிபட்டனர். வாகன சேவையின் முன் திருமலை ஜீயர்கள் குழுவினர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பாடிச் செல்ல, வாகன சேவைக்கு பின்னால் அன்னமாச்சார்யா திட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி வந்தனர்.