புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி அடைந்த தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஆரோவில் சர்வதேச நகரத்தை உருவாக்கியவர் அன்னை. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 1878 -ஆம் ஆண்டு, பிப்ரவரி 21-ஆம் தேதி பிறந்த அன்னையின் இயற்பெயர் 'மீரா அன்போன்ஸா'. இளம் வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கடந்த 1914 -ஆம் ஆண்டு, மார்ச் 29 -ஆம் தேதி, புதுச்சேரிக்கு வருகை புரிந்தார்.
அன்னையின் பெரும் முயற்சியால் புதுச்சேரியில் அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் சர்வதேச நகரம் ஆகியவை தோற்றுவிக்கப்பட்டன. 1973 -ஆம் ஆண்டு நவம்பர் 17 -ஆம் தேதி, புதுச்சேரியில் அன்னை உயிர் நீத்தார். ஆண்டுதோறும் அவரது மகா சமாதி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை வசித்த அறைகள், பக்தர்கள் பார்வைக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை திறந்து வைக்கப்பட்டன. மேலும், அவரது சமாதியும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புதுச்சேரி, தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து, அன்னையின் சமாதியில் வழிபாடு நடத்தினர்.