திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு யானை வாகன சேவையின்போது 32 கிலோ எடையுள்ள ஏழுமலையானின் 1008 காசு மாலை அணிவிக்கப்பட்டது.
திருச்சானூர் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தாயார் தனக்கு மிகவும் விருப்பமான யானை வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார். யானை வாகன சேவையின்போது திருமலையில் ஏழுமலையானுக்கு அணிவிக்கும் 1008 காசு மாலையைத் தாயாருக்கும் அணிவிப்பது வழக்கம்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு யானை வாகனத்தின் போது தாயாருக்கு 32 கிலோ எடையுள்ள 1008 காசு மாலை அணிவிக்கப்பட்டது. இதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு திருமலையிலிருந்து திருச்சானூருக்கு ஏழுமலையானின் 1008 காசு மாலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழியில் பக்தர்கள் ஏழுமலையானின் காசுமாலைக்கு ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.