திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் மலர் பல்லக்கில் பவனி வந்தார்.
இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டிருந்து தரிசித்தனர். பின்னர் தாயாருக்கு பால், தயிர், தேன், மஞ்சள், குங்குமம், சந்தனம், பழரசம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பல்வேறு மலர்கள் மற்றும் உலர் பழங்களால் ஆன மாலைகள், கீரிடம் உள்ளிட்டவை தாயாருக்கு அணிவிக்கப்பட்டன. இதையடுத்து மாலையில் சகஸ்ரதீபாலங்கார மண்டபத்தில் 1008 விளக்குகளுக்கு இடையில் பத்மாவதி தாயார் ஊஞ்சல் சேவை கண்டருளினார்.
யானை வாகன சேவை
பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு 8 மணி முதல் 10 மணி வரை யானை வாகன சேவை நடைபெற்றது. ஏழுமலையானுக்கு கருடன் வாகனமாக அமைந்ததுபோல், தாயாருக்கு யானை வாகனமாக அமைந்தது.
தனக்கு மிகவும் பிரியமான யானை வாகனத்தில் ஏழுமலையானின் தர்மபத்தினியான தாயார் மாடவீதியில் வலம் வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டு தாயாருக்கு கற்பூர ஆரத்தி சமர்பித்து வழிபட்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாகன சேவையின்போது நாலாயிர திவ்யபிரபந்த பாராயணமும், வாகன சேவையின்போது கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.