தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வந்தனர்.
தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் திங்கள்கிழமை காலை சுப்ரபாத சேவையில் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட்டார்.
தரிசனம் முடித்து திரும்பிய அவரை தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து ஏழுமலையானின் பிரசாதம், 2018-ஆம் ஆண்டின் நாள்காட்டி மற்றும் கையேடு, ஏழுமலையானின் திருவுருவப் படம் ஆகியவற்றை வழங்கினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். அவரை பத்மாவதி விருந்தினர் மாளிகை முன் தேவஸ்தான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணா மலர்ச்செண்டு அளித்து வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமி இரவு 7 மணிக்கு திருமலை குளக்கரையில் உள்ள வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் வழிபட்டார். செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.