தமிழகம் எப்போதும் செழிப்புடன் விளங்க திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினர் 11 பேருடன் திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மலர் செண்டு அளித்து வரவேற்றனர்.
இரவு திருக்குளக்கரையில் உள்ள வராக சுவாமியை குடும்பத்தினருடன் தரிசித்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை காலை அஷ்டதளபாத பத்மாராதனை சேவையில் முதல்வர் பழனிசாமி ஏழுமலையானை குடும்பத்தினருடன் சேவித்தார்.
கொடிமரத்தை வலம் வந்தபடி தரிசனம் முடித்து திரும்பிய அவரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், 2018-ஆம் ஆண்டின் நாள்காட்டி, கையேடு, ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கடந்த முறை நான் திருமலைக்கு வந்த போது தமிழகத்தில் வறட்சி நிலவியது.
நான், ஏழுமலையானிடம் தமிழகத்தின் வறட்சியை போக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். தற்போது மழை பெய்து, தமிழகம் செழிப்பாக வளமையாக மாறி உள்ளது. அதனால் எப்போதும் தமிழகம் இதுபோன்று இருக்க அருள்புரிய வேண்டும் என்று ஏழுமலையானிடம் மீண்டும் வேண்டிக்கொண்டேன் என்றார் அவர்.