பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கத்தில் ராதா - ருக்மணி சமேத வேணுகோபால் சாமி கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை பஜனையுடன் சந்தனக் குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மகா கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், ராதா-ருக்மணி சமேத வேணுகோபால் சாமிக்கு கரிக்கோல நிகழ்வு, தீபாராதனை, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், முதலாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
புதன்கிழமை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம், தீபாராதனை, மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை நான்காம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம், பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விமான கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. பின்னர் தீர்த்த பிரசாதம் வழங்குதல், அன்னதானம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அலங்கார பல்லக்கில் ராதா, ருக்மணி சமேத வேணுகோபால் சாமி வீதி உலா வாண வேடிக்கை முழங்க நடைபெற்றது. இறுதியாக கிருஷ்ண லீலை தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை ஏனம்பாக்கம் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.