திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 15 முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வரும் நவம்பர் 15 முதல் 23 வரை திருச்சானூரில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, திருச்சானூரில் மின்விளக்கு, திருக்குளத்தை சுத்தப்படுத்தி, புதிய நீர் நிரப்புதல், மலர் அலங்காரங்கள், மகரதோரணங்கள், மாடவீதியில் வண்ண கோலமிடுதல், கோயிலை சுற்றி மலர் பூங்கா, ஆயுர்வேத பூங்கா ஏற்படுத்துதல், கண்காட்சி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரம்மோற்சவத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக குளியல்அறை, கழிப்பறைகள், தங்கும் வசதிகள் அமைத்தல், அன்னதானம் வழங்குதல், கூடுதலாக லட்டு பிரசாத தயாரிப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதற்கான பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் பிரம்மோற்சவத்துக்கான சுவரொட்டியை தேவஸ்தானம் வெளியிட உள்ளது.