புரட்டாசி முதல் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகளில் திருமலைக்கு நடைபாதையில் வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்யதரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு மிக உகந்த மாதம். அதனால் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் கோவிந்தமாலை அணிந்து கொண்டு அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக மார்க்கத்தில் திருமலைக்கு வருவது வழக்கம்.
தற்போது, புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் சனிக்கிழமைகளில் நடைபாதை வழியாக திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவர். மேலும், வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால் செப்டம்பர் 23, 30-ஆம் தேதி ஆகிய இரண்டு சனிக்கிழமைகளில் திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
10 டன் காய்கறிகள் நன்கொடை
ஏழுமலையானுக்கு சனிக்கிழமை முதல் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதனைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கி வருகிறது.
இதற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை சில பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.
அதன்படி, விஜயவாடாவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் தலைவர் நரசய்யா - சமதா தம்பதி 10 டன் காய்கறிகளை புதன்கிழமை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினர். அதனை தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுக் கொண்டு, திருப்பதியில் உள்ள குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தினர்.