அரக்கோணம் பஜார் பகுதி பொதுமக்களின் திருமலை-திருப்பதி பாதயாத்திரை பயணத்தை முன்னிட்டு, வரசித்தி விநாயகர் கோயில் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சீர்வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட சீனிவாச பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எதிர்கொண்டழைக்கும் வைபவம் நடைபெற்றது.
ஆடல் பாடல்களுடன் சீனிவாச பெருமாள் அழைத்து வரப்பட்டு மேடையில் அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் திருப்பணி நிர்வாகக் குழுத் தலைவர் என்.அரிகிருஷ்ணன், தொழிலதிபர் மணிநாயுடு, நகராட்சி ஒப்பந்ததாரர் கோபண்ணாரவி, அதிமுக பிரமுகர்கள் தாமு, முனுசாமி, நகர திமுக நிர்வாகி கோ.வ.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.