திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ரூ.6.50 லட்சம் செலவில் பெங்களூரு பக்தர் வழங்கிய வஜ்ராங்கியில் சனிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது.
நவக்கிரக ஸ்தலங்களில் சனீஸ்வர பகவானுக்குரிய ஸ்தலமான திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில்
நிர்வாகத்தினர் ஒப்புதலின்படி, பெங்களூருவைச் சேர்ந்த பக்தர் சந்திரசேகர், சனீஸ்வரபகவானுக்கு ரூ.6.50 லட்சம் மதிப்பில் வஜ்ராங்கி தயார் செய்து வந்தார்.
இதை கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம், தருமபுர ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தார்.
பின்னர், அந்த வஜ்ராங்கி, ஸ்ரீ சனீஸ்வரபகவானுக்கு சாற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானுக்கு வஜ்ராங்கி சாற்றி வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.