திருமலை பிரம்மோற்சவம் 2-ஆம் நாள்: சின்ன சேஷம் - அன்னப் பறவை வாகனத்தில் மலையப்பர் பவனி

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்னப் பறவை வாகனத்திலும் உற்சவர் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து
காலை சின்ன சேஷ வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்த  உற்சவர் மலையப்ப சுவாமி.  (வலது) இரவு அன்ன வாகனத்தில் வந்த உற்சவர்.
காலை சின்ன சேஷ வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்த உற்சவர் மலையப்ப சுவாமி. (வலது) இரவு அன்ன வாகனத்தில் வந்த உற்சவர்.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்திலும், இரவு அன்னப் பறவை வாகனத்திலும் உற்சவர் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஏழுமலையானுக்கு சனிக்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் விமரிசையாக தொடங்கியது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. 5 தலைகள் கொண்ட சின்ன சேஷ வாகனத்தில் தர்பார் கிருஷ்ணர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் பவனி வந்தார். 
திருமஞ்சனம்: மலையப்ப சுவாமிக்கு மாடவீதியில் பவனி வந்த களைப்பை போக்க மதியம் 12 மணிக்கு வசந்த மண்டபத்தில் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. அப்போது, பால், தயிர், தேன், பழரசம், மூலிகை கலந்த வெந்நீர், மஞ்சள், சந்தனம், துளசி மாலை உள்ளிட்டவற்றால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. 
ஊஞ்சல் சேவை: திருமலையில் பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளிலும் மலையப்ப சுவாமி பலவித வாகனங்களில் மாடவீதியில் வலம் வருகிறார். 
இரவு நடைபெறும் வாகன சேவைக்கு முன், அலங்காரம் செய்யப்பட்ட உற்சவமூர்த்தி ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள சகஸ்ர தீபாலங்கார மண்டபத்தில் 1,008 விளக்குகளுக்கு இடையில் ஊஞ்சல் சேவை கண்டருளுவார். அப்போது, இசைக் கலைஞர்கள் அன்னமாச்சார்யா கீர்த்தனைகள், வெங்கமாம்பா கீர்த்தனைகள் உள்ளிட்டவற்றை பாடுவர். 
அன்னப்பறவை வாகனம்: பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் இரவு அன்னப்பறவை வாகனசேவை நடைபெற்றது. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி வடிவத்தில் வெண்நிற உடைகளை அணிந்து, கையில் வீணையுடன் மலையப்ப சுவாமி அன்னப்பறவை வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து, எம்பெருமானை வழிபட்டனர். 
பால், தண்ணீர் இரண்டையும் கலந்து வைத்தாலும் அன்னப்பறவை தண்ணீரிலிருந்து பாலை பிரித்து அருந்தும் தன்மை கொண்டது. அது போல் மனிதர்களும், ஞானம்-அஞ்ஞானம், இன்பம்-துன்பம், பகை-நட்பு, உண்மை-பொய், ஆசை-பேராசை உள்ளிட்டவற்றில் தீமைகளை நீக்கி விட்டு, அதிலிருக்கும் நன்மைகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. அதனால் அன்னப்பறவை வாகனசேவையை காண்பவர்களுக்கு அந்த தன்மை எளிதில் வந்து விடும் என்று ஆச்சார்யர்கள் கூறுகின்றனர். 
வாகன சேவையின் முன்பாக திருமலை ஜீயர் கோஷ்டியினர் நாலாயிரத் திவ்யபிரபந்தங்களை பாடியபடி செல்ல, கலைக் குழுவினர் கோலாட்டம், மயிலாட்டம் என ஆடியும், பாடியும் எம்பெருமானுக்கு சேவை செய்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com