திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் 5-ம் திருநாளில் ஏழுமலையான் சூடிக் கொள்ள, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மங்கள பொருட்கள் அனுப்பும் விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
ஏழுமலையானுக்கு ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படும். இதில் 5-ஆம் திருநாளில் கருட சேவையின் போது, ஏழுமலையான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த மாலை உள்ளிட்ட மங்களப் பொருட்களைச் சூடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதற்காக திங்கள்கிழமை ஸ்ரீஆண்டாளுக்கு விசேஷ மாலை உள்ளிட்ட மங்கள பொருட்கள் சூடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இவை திருப்பதிக்கு அனுப்புவதற்கு முன்பு மாட வீதிகளின் வழியே வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ச.ராமராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மங்களப் பொருட்களை ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் தலைமையில் பட்டர்கள் திருப்பதிக்கு எடுத்துச் சென்றனர்.
ஆண்டாள் சூடிக்களைந்த மங்களப் பொருள்களுடன் திங்கள்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற வீதி உலா.