விளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை)

2018 விளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான பலன்களை...
விளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் (சிம்மம் முதல் விருச்சிகம் வரை)

2018 விளம்பி ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் சொல்லுமளவுக்கு லாபங்கள் கிடைக்கும். செய்தொழில் கணிசமாக விருத்தியடையும். பெற்றோர்களுடன் இணக்கமாக நடந்துகொண்டு அவர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வழக்கு விஷயங்கள் அனுகூலமான திருப்பங்களை சென்றடையும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள்கள் சிறிது விரயமாகும் காலமிது. செலவுகள் செய்யும் நேரத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உற்றார், உறவினர்களுடன் சுமுகமான தொடர்பை வைத்துக்கொள்வீர்கள்.

உடல் ஆரோக்கியம் மேம்பட  யோகா, பிராணாயாமம் செய்யவும்.  எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களிலும் சேருவீர்கள். பழைய தொழிலில் ஆதாயம் இல்லை என்று கருதி புதிய தொழிலையும் தொடங்குவீர்கள். திடீரென்று மகிழ்ச்சி தரும் உல்லாசப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள். செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரத்தையும் போடுவீர்கள். கடன்கள் அனைத்தையும் படிப்படியாக அடைத்து விடுவீர்கள். சிலருக்கு பங்குவர்த்தகத்தின் மூலமும் சிறிது கூடுதல் வருமானம் கிடைக்கும்.  உங்களுக்குக்கீழ் வேலைப் பார்ப்பவர்களுடன் உறவு சீராகவே தொடரும். குடும்பத்தில் முயற்சியின் பேரில் சுப காரியப் பேச்சுவார்த்தைகள் கூடிவரும். மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் எண்ணிய எண்ணங்களும் போடும் திட்டங்களும் கூட சில சமயம் நடைபெறவில்லை என்றாலும் சில நாள்கள் கழித்து பலன் தரக்கூடியதாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை சிறிது சிரமத்தின்பேரில் வாங்குவீர்கள். சுய கௌரவத்திற்காக மற்றவர்களை ஏவி காரிய சாதனை செய்து வந்த நீங்கள் தற்சமயம் தாமாகவே நேர்முகமாக காரியத்தில் காலடி எடுத்து வைத்து மாறுதலைச் சந்திப்பீர்கள். 

வண்டி வாகனங்களுக்குப் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். எந்த விஷயத்திலும் அகலக்கால் வைக்க வேண்டாம். தேக ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டி வரும். கண், தோல், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தைரியம் துணிவு இப்பொழுது சரிபாதிக்குமேல் குறைந்துவிட்டது போல் தோன்றும். அதனால் அவசரப்பட்டு எதையாவது பேசிவிட்டு பின்பு அதனால் மனவருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. எவருக்கும் முன்ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களை தயார் படுத்திக் கொள்வீர்கள். பணவரவு குறித்த நேரத்தில் கை வந்து சேரும். வியாபாரிகளுக்கு லாபம் பெருகினாலும் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முதலீடுகளை கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்தப்பின்பு செய்யவும். வேகமாக விற்பனையாகும் பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்குமென்பதால் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள்.  பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். வழக்குகள் முடிய தாமதமாகும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து சில பணிகளைக் கொடுக்கும். அவைகளை செவ்வனே செய்து முடித்து விடுவீர்கள். தொண்டர்களின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டங்களை சிரமமின்றி முடிப்பீர்கள். கட்சிப் பணிக்காக சில புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற தீவிர முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். பெண்மணிகள் கணவருடனான உறவு சீர்படும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார் உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரும். மாணவமணிகள் படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். பாடங்களை முன்னதாகவே படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவருக்கும் ஒருமித்த ஒன்று போன்ற வரவேற்பையும் கொடுத்து அன்னியோன்யமாகப் பழகி நற்பெயர் எடுப்பீர்கள். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சமமாக ஏற்றுக்கொண்டு நடப்பீர்கள். வருமானம் சிறப்பாக இருந்தாலும் அனாவசியச் செயலவுகளைத் தவிர்த்து சிக்கனமாக குடும்பம் நடத்துவீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சில நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்புகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசாங்க தொடர்புகளில் கூடுமான வரையில் சாதகமான பலன்களும் சலுகைகளும் கிடைக்கும். 

குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். நீண்ட காலமாக உடல் உபாதைகளில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகி பூரண ஆரோக்கியம் பெறுவார்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாறிச் செல்வார்கள். கடந்த சில ஆண்டுகளாக பட்ட துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் மறைந்து சகஜ நிலை உருவாகும். இழந்த அளவுக்கு மீண்டும் பொருள் கை வந்து சேரும். கடந்த பல ஆண்டுகளாக நடைபெறாமல் தடைபட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் இந்த காலகட்டத்தில் மளமளவென்று முடியும்.  உறவினர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவார்கள். அயர்ச்சி, பலகீனம், இயலாமை, சோம்பல் போன்றவைகள் அனைத்தும் மாறி புத்துணர்ச்சியுடன் காரியமாற்றும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் அசையாச் சொத்துகள் விஷயத்தில்  ஒதுக்கி வைத்திருந்த திட்டங்கள் யாவும் ஒவ்வொன்றாகக் கூடி வரும். சிலருக்கு பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். மேலும் சொத்துகளில் இருந்துவந்த வில்லங்கங்கள் தீர்ந்து விடும். உங்களின் ஆற்றலும் திறமையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். செய்தொழிலை மேம்படுத்த பயணங்களை மேற்கொள்வீர்கள். சொல்லும் சொல் பயனுள்ளதாக இருக்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். உடல்நலத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் உற்றார் உறவினர்கள், உடன்பிறந்தோர் உங்களுக்கு முழுமையான ஆதரவைக் கொடுப்பார்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகள் தேடிவரும்.  மனதிற்கினிய ஆலய வழிபாடுகளைச் செய்வீர்கள். செய்தொழிலில் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று காரியமாற்றும் காலகட்டமிது. 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தவர்கள், குற்றமற்றவர் என்று நிரூபணமாகி வேலையில் சேர்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பார்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் செல்லவும். அரசு விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். கடன் பிரச்னையை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சந்தையில் உங்கள் விளைபொருள்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் தேடிவரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். சமுதாய நோக்குடைய எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்பார்ப்புகள் அகலும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெறுவார்கள். புதிய பாணியில் திறமையை வெளிப் படுத்துவார்கள். சக கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையை காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வர சிறப்புகள் கூடும்.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று பிரபலஸ்தர் என்று பெயரெடுப்பீர்கள். செய்தொழிலைச் செம்மையாக நடத்துவீர்கள். உங்களுக்குக்கீழ்  வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரம் படிப்படியாக வளர்ச்சி அடையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த ஆதரவும் கிடைக்கும். போட்டிகளில் முழுமையான வெற்றி கிடைக்கும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். 

வெளிவட்டாரத்தில் பரபரப்பாகச் செயலாற்றுவீர்கள். அதேநேரம் குழந்தைகள் வழியில் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். மேலும் அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். சிலர் சிறிதளவு முதலீடு செய்து பெரிய அளவுக்கு தொழில் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். சிலருக்கு வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படலாம்.  பெற்றோர்களின் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டியிருக்கும். அவர்களுக்கு சிறிது மருத்துவச் செலவுகளும் உண்டாகும். மற்றபடி நேரடியாகவோ மறைமுகமாகவே ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளும் லாவகமாகச் சமாளித்துவிடும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானத்திற்கு எந்தவிதக் குறைவும் இருக்காது. குடும்ப ஒற்றுமை நல்ல விதத்தில் காணப்படும்.  கூட்டாகத் தொழில் செய்தவர்கள் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு தனித்து செயல்படத் தொடங்குவார்கள். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் சிறிது தோக்கம் காணப்படுவதால் அவர்களை சற்று கூடுதலாக கவனிக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்பாளர்கள் உங்கள் காலை வாரிவிட திட்டமிடுவார்கள். 

சமயோஜித புத்தியால் சமாளித்து விடுவீர்கள். உடன்பிறந்தோரை அரவணைத்து அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். பங்கு வர்த்தகத் துறையின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். உங்கள் பேச்சில் கண்ணியமும் நடையில் மிடுக்கும் உண்டாகும். சிலருக்கு திடீரென்று வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  சிலருக்கு வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மாற்றம் மற்றும் ஊதிய உயர்வு ஆகிய இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகளும் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடம்பில் இருந்த சோர்வும் மனதிலிருந்த தெளிவின்மையும் அகன்று மிடுக்குடன் நடந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வீர்கள். கூட்டாளிகளும் நண்பர்களும் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வர். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

பொருளாதார வளம் நன்றாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். நீர் வளத்தால் உங்கள் எண்ணங்கள் பலிதமாகும். புதிய குத்தகைகளினால் லாபம் கொட்டும்.  வயல் நிலங்களை வாங்கி மகிழ்வீர்கள். பால் வியாபாரத்தால் பலன் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். மாற்று கட்சியினரிடம் மனம் திறந்து பேச வேண்டாம். கலைத்துறையினரின் அனைத்து காரியங்களும் சுமுகமாகவே முடிவடையும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார வசதி மேம்படும். 

புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ராமரை ராமநாமத்தை ஜெபித்தபடி  வழிபடவும்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

இந்த விளம்பி வருடத்தில் ஐப்பசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அனைத்துச் செயல்களும் அனுகூலமாகவே முடியும். வருவாயும் வழக்கத்திற்கு மாறாகவே கூடுதலாக இருக்கும். தொழில் வழிச் சிந்தனையாளர்களை நன்கு செயல்படச் செய்வீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உங்களுக்கென்று குடும்பத்திலும் வெளியிலும் ஒரு தனி மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள். 

பொருளாதாரத்தில் வளர்ச்சி பெருகிக் கொண்டே போகும். சொல்லும் சொல் வாக்கு பலிதமுடையதாக இருக்கும். வசிக்கும் வீட்டை நவீனமயமாக்குவீர்கள். ஆன்மிகம் தத்துவம் போன்றவற்றில் மனதைச் செலுத்துவீர்கள். இடம் விட்டு இடம் மாறி செய்தொழிலைச் செய்ய வாய்ப்புகள் உண்டாகும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூல சலுகைகள் தேடிவரும். குடும்ப விஷயங்களில் மூன்றாவது மனிதரின் தலையீட்டைத் தவிர்க்கவும். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டாம். ஆகார விஷயங்களில் கவனமாக இருக்கவும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த காலகட்டத்தில் சாதகமாக இராது.

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் இதுவரை நினைத்ததற்கு நேர்மாறாக நடந்து வந்த காரியங்கள் மனதிற்கு பிடித்தபடி முடிவடையும். மனதில் புதிய நம்பிக்கை உதயமாகும். குடும்பத்திலிருந்து வந்த குழப்பங்கள் யாவும் விலகி விடும். உற்றார் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். பொருளாதாரம் சீராகவே தொடரும். புதிய கடன்கள் எதுவும் வாங்க நேரிடாது. மனதில் இருந்த சஞ்சலங்களும் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தோருக்கு  உபகாரங்கள் செய்தாலும் திருப்திபடுத்த முடியாது. 

தீவிர முயற்சியின் பேரில் கடன்வாங்கி புதிய வீடு கட்டவும் சந்தர்ப்பங்கள் கூடிவரும். வெளியிடத்திலிருந்து வர வேண்டிய பணநிலுவைகளும் சிரமத்தின்பேரில் வந்து சேரும். சமுதாயத்தில் உயர்தோரின் நட்பு கிடைக்கும். இதனால் சமுதாயத்தில் பெயர் புகழ் உயரும். சிலர் புதிய தொழிலைத் தொடங்குவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருத்தல் நல்லது. 

உத்தியோகஸ்தர்களுக்கு தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் வகையில் நடந்து கொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வியாபாரிகள் சௌகரியங்களை எதிர்பார்க்காமல் கடினமாக உழைப்பார்கள். போட்டியாளர்களின் முட்டுக்கட்டைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். பண விஷயங்களை உங்கள் நேர்ப்பார்வையில் வைத்துக்கொண்டால் நலமாக இருக்கும். விவசாயிகளுக்கு தோட்டம், தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். தானிய விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வருமானத்தைப் பங்குபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் கவனமாக இருக்கவும். பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பி அடைப்பீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சியில் ஆதரவைப் பெறுவார்கள். தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப் படாமல் விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். சமுதாயத்திற்கு பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். 

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களினால் மனநிம்மதி அடைவார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பெண்மணிகள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். முக்கிய முடிவுகளை எடுக்கும்போது யோசித்து எடுக்கவும். மாணவமணிகள் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம். நண்பர்களால் ஏற்படும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். 

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.
 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிக்கான விளம்பி வருடப் பலன்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும் https://goo.gl/w2kPE2

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com