திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத தேரோட்டத் திருவிழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 8-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகின்றது.
சித்திரைத் திருவிழாவின் பத்து நாட்களும் சிம்மம், அன்னம், ரிஷபம், யானை என ஒவ்வொரு வாகனத்தில் அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தாள்.
சித்திரை தேரோட்ட திருவிழாவில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். இதனால், பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
சித்திரைத் தேரோட்டத்தையொட்டி ஏப்ரல் 16 முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அறிவித்துள்ளது. மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.