ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலை சுற்றி 280 அதிநவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில் கோயிலுக்கும், சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருமலையில் தற்போது உள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றி விட்டு 4 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 1400 அதிநவீன கேமராக்கள் பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக உயர் பாதுகாப்பு மிக்க இடங்களாகக் கருதப்படும் கோயில் மற்றும் மாடவீதியில் 280 கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கின.
மேலும், தீ விபத்து, புகை, மர்ம பொருட்களை விட்டுச் செல்வது, தடை செய்யப்பட்ட பகுதியில் ஆட்கள் நடமாட்டம் போன்றவற்றை உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கும் விதமாக சிசிடிவி கேமராவுடன் பிணைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பயன்படுத்தப்படவுள்ளது.