திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பெயரில் இயங்கி வரும் போலி இணையதளங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணா இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது தரிசனம், வாடகை அறை முன்பதிவு, உண்டியல் காணிக்கை சமர்ப்பித்தல், நன்கொடை வழங்குதல், ஸ்ரீவாரி சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலம் வழங்கி வருகிறது.
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சிலர் போலி இணையதளங்களை உருவாக்கி ஏழுமலையான் தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் உள்ளிட்டவற்றை அதிக கட்டணத்துக்கு முன்பதிவு செய்து அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பக்தர்கள் தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் புகார் அளித்தனர்.
அவர் போலி இணையதளங்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அதிகாரி ரவிகிருஷ்ணாவுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் தேவஸ்தானம் பெயரில் இயங்கி வரும் 8 போலி இணையதளங்களைக் கண்டறிந்து, அதுகுறித்து காவல் துறையின் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
விரைவில் போலி இணையதளங்களை முடக்கி, நடவடிக்கை மேற்கொள்வதாக ரவிகிருஷ்ணாவிடம் போலீஸார் தெரிவித்தனர்.