ஊனக் கண்ணை இழந்து ஞானக்கண் பெற்ற நீலகண்ட தீட்சிதர்

மதுரையை அரசாளும் அன்னை மீனாட்சியின் லீலா விநோதம் இது. அன்னைக்கு மீனாட்சி...
ஊனக் கண்ணை இழந்து ஞானக்கண் பெற்ற நீலகண்ட தீட்சிதர்

மதுரையை அரசாளும் அன்னை மீனாட்சியின் லீலா விநோதம் இது. அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் வந்ததற்குக் காரணம்.. மீன் போன்ற கண்களை உடையவள் என்பதால் அன்னைக்கு மீனாட்சி என்ற பெயர் தோன்றியது.

மீன் + ஆட்சி = மீனாட்சி. மீனம் என்றால் மீனைக் குறிக்கிறது. அட்சம் என்பது கண்ணைக் குறிக்கிறது. அட்சி என்பது கண்ணை உடையவள் என்பதைக் குறிக்கிறது. மீன் தன் முட்டைகளைக் கண்ணால் பார்த்து நின்று அக்கண்பார்வை திறத்தால் அம்முட்டைகளிலிருந்து குஞ்சுகளைத் தோன்றச் செய்து காப்பாற்றும் இயல்பை உடையது. இவ்வாறே அன்னை மீனாட்சி உலகத்து உயிர்களையெல்லாம் தன் அருள் கனிந்த பார்வையால் காத்தருளி வருகிறாள். இதனால்தான் அன்னை மீனாட்சி என்ற திருப்பெயர் பெற்று திகழ்கிறாள்.

பதினேழாம் நூற்றாண்டில் நடைபெற்ற சம்பவம் இது. மதுரையில், இப்போதும் நாம் காணும் "புது மண்டபம்" 1626 லிருந்து 1633 வரை ஏழு வருடங்களாக உருவாக்கப்பட்டவையாகும். சில்ப சாஸ்திர நிபுணரான சுமந்திர மூர்த்தி ஆச்சாரி என்பவரின் தலைமையில் ஏராளமான சிற்பிகள் இந்தப் புது மண்டபத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். அதிஅற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த இந்த மண்டபம் உருவானபோது, மதுரையில் திருமலை நாயக்கர் அரசராக இருந்து வந்தார்.

இவரிடம் ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் என்பவர் மந்திரியாகப் பணிபுரிந்தார். இவருடைய பெரிய பாட்டனார் தான், ஈஸ்வர அவதாரமாகவே மதிக்கப்பட்ட வந்த ஸ்ரீ அப்பய்ய தீட்சிதர் என்பவர் ஆவார். நீலகண்ட தீட்சிதர் திரிகாலஞானி ஆவார். அன்னை மீனாட்சியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருந்தவர். தீட்சிதர் ஒரு நாள் புது மண்டபத்தின் வேலைகளை மேற்பார்வையிட்டபடியே நடந்து வந்தார்.

நடுவரிசைத் தூண்களின் அருகில் வந்தபோது, சிற்பி ஒருவர் கவலை தேய்ந்த முக துயரத்தோடு அமர்ந்திருப்பதைக் கண்டார். ஏனப்பா… கவலையோடு இருக்கிறாய்?, என்று விசாரித்தார்.

அதற்கு அவர், தீட்சிதரை வணங்கி, சுவாமி! இந்தத் தூண்களில் எல்லாம் மதுரை நாயக்க மன்னர்களின் வடிவங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால்… என்னவோ தெரியவில்லை சுவாமி! நான் மிகக் கவனத்தோடு ஜாக்கிரதையாகத்தான் செதுக்கினேன். என்னவோ தெரியவில்லை, நமது மன்னரின் பட்டத்து அரசியின் சிலையை செதுக்கும்போது மட்டும் இடது தொடையில் ஒரு சில்லு பெயர்ந்து விழுந்து குறையாகத் தெரிகிறது சுவாமி. திரும்பவும் செதுக்கலாம் என்றால் இந்த அளவுக் கல் ஏதும் இங்கு இல்லை. இதை நினைத்து கவலையாயிருக்கிறேன் என்றான். 

(சிற்பங்களை செதுக்கும்போது தவறு ஏற்பட்டால் அதைச் சரி செய்ய மாட்டார்கள் சிற்பிகள். அந்த சிற்பம் வீணேயாயினும் பிரித்து வைத்து விடுவர்.)

சிற்பியின் கவலைக்கு காரணம் தெரிந்த நீலகண்ட தீட்சிதர்,.....அப்பா! இனிமேல் நீ கல்லெடுத்து எவ்வளவு சிலைகள் செய்தாலும், அவ்வளவும் இப்படித்தான் ஆகும்.

பரவாயில்லை. தூய்மையான உன் பக்திக்காகத்தான், அன்னை இப்படிச் செய்திருக்கிறாள். சாமுத்ரிகா லட்சணப்படி, நம் பட்டத்து ராணிக்கு இடது தொடையில், இதே இடத்தில் பெரியதொரு தழும்பு இருக்க வேண்டும். அதனால்தான், நீ செதுக்கிய சிற்பத்தில் அப்படி நேர்ந்து விட்டது. இப்படியே இச்சிலையை முழுமைப்படுத்தி முடித்துவிடு! என்றார்.

சிற்பி கையெடுத்து அவரை கும்பிட, நீலகண்ட தீட்சிதர் மற்ற பகுதியைக் காணச் சென்று விடுகிறார். மறுநாள் மண்டப வேலைகளைப் பார்வையிட்ட வண்ணம் திருமலை நாயக்கர் வந்தபோது....... சில் பெயர்ந்த சிலையைப் பார்க்கிறார். சிலையின் பின்னமான பகுதி அவர் கண்களில் பட, இது குறித்து சிற்பியை விசாரிக்கிறார்.

ஏன் இந்த இடத்தை அப்படியே விட்டுவிட்டாய்… வேறு சிலை செய்யவேண்டியது தானே? என கேட்டார்.

மன்னர் கேள்விக்கு எப்படியான பதிலை சொல்வதென்று தெரியவில்லை சிற்பிக்கு. வார்த்தைகளை மென்று விழுங்கிக் கொண்டே…. மன்னா!… அரசிக்கு அந்த இடத்தில் தழும்பு இருக்கிறது, அதனால்தான் சிலை வடிக்கும்போது இயற்கையாகவே பின்னம் ஏற்பட்டு விட்டது என்று தீட்சிதர் சொன்னதாய் சொல்லி விட்டார்.

ஆதலால், இதை இப்படியே விட்டுவிடும்படியும் அவர்தான் சொன்னார் என்றான் சிற்பி. மன்னரின் உள்ளம் கொதித்தது. கண்கள் சிவந்தது. இதை நினைத்து நினைத்து இரவு முழுவதும் அவருக்குத் தூக்கம் வரவில்லை.. நம் ஒருவருக்கே மட்டுமே தெரிந்த இந்த விஷயம் எப்படி நீலகண்ட தீட்சிதருக்கு தெரிந்தது? ஒரு வேளை அரசி நீராடிய வேளையில் ஒழிந்திருந்து பார்த்திருப்பாரோ? எனச் சந்தேகம் கொண்டான்.

இந்த சந்தேகத்திற்கு காரணம்,...அந்தப்புரம் வரை வந்து செல்லும் அதிகாரம் நீலகண்ட தீட்சிதருக்கு இருந்ததினால்....,மன்னனுக்கு சந்தேக பேய் பூதகரணமாய் எழும்பியது.

மன்னன் தீட்சிதரைத் தவறாக நினைத்து விட்டார். இதன் விளைவு? நீலகண்ட தீட்சிதரின் இரு கண்களையும் பறிக்கத் தீர்மானித்தார். விடிந்ததும், அரண்மனை காவலர்களை அழைத்தார். தீட்சிதரை உடனே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

நீலகண்ட தீட்சிதரைத் தேடிச் சென்ற காவலர்கள், அந்த நேரத்தில் தீட்சிதர் தன் வீட்டில், அம்பாளுக்குப் பூஜை புணர்மாணங்களை முடித்துவிட்டுத் தீபாராதனையை ஏற்றி இறக்கி காட்டிக்கொண்டு இருந்தார். சுவாமி!,...மன்னர் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னதாக உத்தரவு. அதனால் இங்கு வந்திருக்கிறோம் என்றனர் அரண்மனைக் காவலர்கள்.

இதில் ஏதோ ஒரு விபரீதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை, தன் ஞான திருஷ்டியால் உணரப் பெற்றார். ஞானதிருஷ்டியின் மூலம் அணைத்தும் உணரப் பெற்ற நீலகண்ட தீட்சிதர், மன்னர் அழைத்து வரச் செய்த காரணத்தையும் தெரிந்து கொண்டார். உடனே அவர், அம்பிகையைப் பார்த்து, அம்பிகையிடம் தன் துயரத்தை வெளியிட்டார்.

ஏற்கனவே தீபாராதனை ஏற்றி இறக்கி காட்டிய தாம்பாளத்தை, அம்மையின் பாதத்தின் முன்பு வைத்திருந்தார். அதிலிருந்த கற்பூரம் முழுதாக எரிந்து முடிந்து விடவில்லை. கற்பூர ஜோதி பரதநடனம் ஆடியது. எரியும் கற்பூரத்தை இருக் கைகளாலும் பிரித்தெடுத்து, அப்படியே தன் இரு கண்களிலும் அப்படியே அப்பிக் கொண்டார். நீலகண்ட தீட்சிதரின் இரு கண்களின் பார்வையும் இருண்டு போனது.

இருண்ட கண்களோடு காவலர்களைத் திரும்பிப் பார்த்த தீட்சிதர்,..........

மன்னர் எனக்குத் தருவதாக எண்ணியிருந்த தண்டனையை, நானே எனக்குக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதாக, மன்னரிடம் போய் சொல்லிவிடுங்கள்! என்று கூறியனுப்பினார். தீட்சிதரின் பதிலால் திடுக்கிட்ட காவலர்கள் அரண்மனையை நோக்கி ஓடினர்.

தீட்சிதர் வீட்டில் நடந்து முடிந்த செய்தியை முழுவதுமாக மன்னனிடம் ஒப்புவித்தனர் காவலர்கள். இப்போதுதான் மன்னனுக்குப் புரிந்துவிட்டிருந்தது. நாம் தர நினைத்த தண்டனையை, அவரே தன் ஞான திருஷ்டியினாலேயே உணர்ந்திருக்கிறார் என்றால்.....‌

என் மனைவியின் உடலில் இருந்த தழும்பைப் பற்றியும் அவர் தெரிந்திருப்பதில் வியப்பென்ன இருந்திருக்கும், என்று கருதிய திருமலை மன்னர், நடந்த தவற்றை எண்ணி மிகவும் மனம் வருந்தினான்.

தீட்சிதரின் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்பு கேட்க நினைத்து, அவர் இல்லம் நோக்கி விரைந்து சென்றார் மன்னன். இல்லத்தில் தீட்சிதர் இல்லை. மன்னனின் மனது ஒருவித நிலைப்பாட்டில் இருக்கவில்லை. சொல்லொண்ணாத் துயரத்துடன் மதுரை மீனாட்சி ஆலயம் விரைந்தான். கோயில் வந்த மன்னனின் மனம் மேலும் அதிர்ச்சியானது. காரணம் அவர் அங்கே கண்ட காட்சி,......

நீலகண்ட தீட்சிதர் அம்மையின் கருவறை முன்பு நின்றிருந்தார். இதுவே அந்த அதிர்ச்சிக்குக் காரணம். பார்வை பறிபோன நிலையிலும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எப்படியோ தட்டுத் தடுமாறி வந்திருந்தார் தீட்சிதர். அம்பிகையின் முன்னின்று, அம்பிகையைப் பாதாதிகேசமாக துதிக்கும் பாடலை இயற்றிப் பாடியபடி நின்றிருந்தார்.

பாதாதிகேசம் என்பது, பாதம் முதல் கேசம் வரை பாடலால் வர்ணித்துப் பாடுவதையே "பாதாதிகேசம்" பாடல் ஆகும். தீட்சிதர் பாடலை பாடிக்கொண்டிருக்கும்போதே மன்னர் உள்பட, அனைவரும் தீட்சிதரின் இருண்ட கண்களை பார்த்தபடியே நின்றிருந்தனர்.

அப்போது, அதிசயிக்கத்தக்க வகையில் அன்னை மீனாட்சி, நீலகண்ட தீட்சிதருக்கு மீண்டும் இரு கண்களுக்கும் பார்வையைத் தந்து இருளைப் போக்கினாள். இதைக் கண்ணுற்ற அத்தனை பேர்களின் கண்களும் ஈரமானது. அப்போது, மீனாட்சி கோயிலில் தீட்சிதர் பாடிய பாடல்களே "ஆனந்த சாகர ஸ்தவம்" என அழைக்கப்பட்டது.

- கோவை கு.கருப்பசாமி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com