திருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற கருட சேவை நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் ஏப்ரல் 21-ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா, தொடர்ந்து 30-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி நாள்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை (ஏப்ரல் 23) கருட சேவையும், கோபுர தரிசனம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் அதிகாலை 4 மணிக்கு உற்சவர் வீரராகவ பெருமாள், பல்வகை மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் காட்சி அளித்தார்.
அதைத் தொடர்ந்து, காலை 6 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 24) காலை உற்சவர் வீரராகவ பெருமாள் சேஷ வாகனத்திலும், இரவு சந்திரப் பிரபையிலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான 7-ஆம் நாள் தேர்த் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, வீரராகவ பெருமாள் கோயில் கெளரவ முகவர் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர்.