தக்கோலம் ஜலநாதீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாதீஸ்வரர் ராஜகோபுர தரிசனத்தில் எழுந்தருளினார்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் தொண்டை நாட்டு சிவதலங்கள் 32-இல் 22-ஆவது தலமான கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 19-ஆம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில், செவ்வாய்க்கிழமை காலை அதிகார நந்திசேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ராஜகோபுரத்தில் கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை ஜலநாதீஸ்வரர் எழுந்தருளினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ப.பரந்தாமகண்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் ஜா.ரவிக்குமார், கோயில் குருக்கள் கே.சம்மந்தமூர்த்தி பாபு சிவாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.