நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஸ்ரீபெருமாள் அவதார உத்ஸவம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19-ஆவது தலமாக விளங்குகிறது நாகை செளந்தரராஜப் பெருமாள் கோயில். ஆதிசேஷன், துருவன், சாலிசுக மன்னன் உள்ளிட்டோர் வழிபட்ட இத்தலம், திருமங்கை ஆழ்வார், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்றது.
அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் சித்திரை மாத மக நட்சத்திர நாளில் நாகை எழுந்தருளினார் என்ற ஐதீகப்படி, இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் ஸ்ரீபெருமாள் அவதார உத்ஸவம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டுக்கான அவதார உத்ஸவம் கடந்த 16-ஆம் தேதி திருவடி திருமஞ்சனத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை நிகழ்வாக தீர்த்தபேரர் திருமஞ்சனமும், மாலை நிகழ்வாக கண்ணாடி ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
ஸ்ரீபெருமாள் அவதார உத்ஸவ நட்சத்திர நாளான புதன்கிழமை காலை 4.30 மணிக்கு தினசரி பூஜைகளுக்குப் பின்னர், உதய கருட சேவையாக அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது, சாற்றுமுறைகள் நடத்தப்பட்டு, கோபுரவாசல் தீபாராதனை நிகழ்ச்சியும், ஸ்ரீபெருமாள் துருவனுக்கு அனுக்கிரகம் செய்த ஐதீக நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர், காலை 10 மணிக்கு அருள்மிகு மூலவர் பெருமாள் சன்னிதியில், இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்கள் பாடப்பட்டு, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது.