அனந்தாழ்வாரைச் சிறப்பிக்கும் வகையில் திருமலையில் புரசைவாரி தோட்ட உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் நந்தவனம் அமைத்து தன் குடும்பத்துடன் ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வாரைப் போற்றும் வகையில் அவர் ஏழுமலையானுடன் இணைந்த நாளில் ஆண்டுதோறும் புரசைவாரி தோட்ட உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாலை உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சகஸ்ர தீபாலங்கர சேவை நடைபெற்று முடிந்ததும், அனந்தாழ்வாரின் பிருந்தாவனத்திற்கு எழுந்தருளினார்.
அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு ஆரத்தி அளித்து வரவேற்று அனந்தாழ்வாரின் பிருந்தாவனத்தில் உள்ள மரத்திற்கு வஸ்திரம், மலர் மாலை அணிவித்து பூஜை செய்தனர். அதன்பின் அங்கு எழுந்தருளிய உற்சவர்களுக்கு ஆரத்தி காட்டப்பட்டு, நிவேதனம் சமர்ப்பிக்கப்பட்டது. பின் அன்னமாச்சார்யா திட்டத்தின் படி பல்வேறு கீர்த்தனைகள், பஜனைப் பாடல்களை பாடகர்களும், பக்தர்களும் பாடினர். பின் உற்சவர்கள் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த உற்சவத்தில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.