ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கரியங்கள் செய்து சேவையாற்றிய திருமலை நம்பியின் 1045ஆவது அவதார உற்சவம் திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
திருமலையில் தங்கி ஏழுமலையானுக்கு கைங்கரியங்கள் செய்வதையே தங்கள் கடமையாக நினைத்து வாழ்ந்து வந்த ஆழ்வார்களின் அவதார நாள் உற்சவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி, ஏழுமலையானுக்கு தீர்த்த கைங்கரியங்கள் செய்து வந்த திருமலைநம்பியின் அவதார உற்சவத்தை தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
தீர்த்த கைங்கரியங்களை மேற்கொண்டதோடு, திருப்பதியில் ராமானுஜருக்கு 18 முறை ராமாயணத்தை திருமலைநம்பி உபதேசித்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
அவரது அவதார உற்சவத்தையொட்டி, மாடவீதியில் உள்ள அவரது சந்நிதியில் சிறப்பு பூஜைகளை தேவஸ்தானம் நடத்தியது.
வேத பண்டிதர்கள் சார்பில் சதுர்வேத பாராயணமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.