திருமலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளதை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது .
ஏழுமலையான் கோயிலில் எவ்வித வருடாந்திர உற்சவங்கள் நடந்தாலும் அதற்கு முந்தைய நாள் அந்த உற்சவம் எவ்விதக் குறையும் இல்லாமல் நடைபெறுவதற்காக தேவஸ்தானம் அங்குரார்ப்பணம் என்னும் நவதானிய முளைவிடும் உற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் வரும் 23ஆம் தேதி வரை தோஷங்களைப் போக்கும் வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.
அதற்கு முந்தைய நாளான திங்கள்கிழமை இரவு அங்குரார்ப்பணத்தை தேவஸ்தானம் நடத்தியது.
அதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான் கோயிலில் இருந்து ஏழுமலையானின் சேனாதிபதி விஷ்வக்சேனர் தலைமையில் அர்ச்சர்கள் அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று புற்று மண்ணை எடுத்து வந்தனர்.
அவர்கள் அதை ஆஸ்தான மண்டபத்தில் இட்டு மண்ணைக் கொண்டு பூதேவியின் உருவத்தை வரைந்தனர். சிலையில் பூதேவியை எழுந்தருளச் செய்து பூஜை செய்த பின் சிலையின் வயிற்றுப் பகுதியிலிருந்து மண் எடுத்து அதை மண்ணால் செய்யப்பட்ட பாலிகைகளில் இட்டு அதில் நவதானியங்களை முளைவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.