இன்று துளசி இலையைப் பறிக்கக்கூடாது ஏன் தெரியுமா? 

இன்று துளசி இலையைப் பறிக்கக்கூடாது ஏன் தெரியுமா? 

ஏகாதசியான இன்று சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும்.

ஏகாதசியான இன்று சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

ஆவணி மாத வளர்பிறை ஏகாதசிக்கு "புத்ரதா" என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், விரும்பிய மேல்படிப்பு அமையவும் மாணவ-மாணவிகள் எம்பெருமாளை வணங்க வேண்டிய நாள் இன்று. 

ஏகாதசி புராணக் கதை இதுதான்..

முரன் என்னும் அசுரன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான். இதனால் அவர்கள் அந்த அசுரனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை துதித்தனர். அவர்களை மகாவிஷ்ணுவிடம் சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, முரன் பகவானை கொல்லத் துணிந்தபோது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. அந்தச் சக்தியை அசுரன் நெருங்கிய வேளையில் அவரிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதத்தை கடைப்பிடித்தால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஏகாதசி விரத முறை

ஏகாதசி விரதத்தை மேற்கொள்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்குத் தயாராக வேண்டும்.

ஏகாதசியான இன்று தினம் துளசி இலைகளைப் பறிக்கக்கூடாது, அதனால் அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது.  மாலை நேரத்தில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று எம்பெருமாளை மனதாரப் போற்றி வழிபட வேண்டும். 

இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களைப் படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாகப் பொழுதுபோக்க வேண்டும்.

இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com