ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் ஒன்பது நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான பவித்ர உற்சவம் கடந்த 22-ம் தேதி தொடங்கி நேற்று 30-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்தின் மேல்புறம் உள்ள பவித்ர உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் கடைசி நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பிறகு சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாளுக்குப் பதிலாக சயனப்பெருமாளை புனித நிராட வைத்தனர். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சயனபெருமாள் நீராடுவதை கண்டருளினார். இந்தத் தீர்த்தவாரி நிகழ்ச்சியைத் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.