மனச்சோர்வும் பயமும் நீங்கிப் படிப்பில் சிறக்கனுமா? சூரிய பகவானை வணங்குங்க!

ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்த அன்பர் ஒருவர், ''என் மகன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான்.
மனச்சோர்வும் பயமும் நீங்கிப் படிப்பில் சிறக்கனுமா? சூரிய பகவானை வணங்குங்க!

ஒருமுறை காஞ்சி மகாசுவாமிகளைத் தேடி மடத்திற்கு வந்த அன்பர் ஒருவர், ''என் மகன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். முக்கியமாகப் பள்ளிக்கூடத்தில் தேர்வு என்றால் அளவு கடந்த பயம். படித்த கேள்விக்கான விடை கூட அவனுக்கு மறந்துப்போகிறது அவன் மனதில் தைரியம் உண்டாக என்ன செய்வதெனத் தெரியவில்லை!'' என வருந்தினார். காமாட்சி குங்குமப் பிரசாதத்தை அவருக்குக் கொடுத்து ஆசீர்வதித்த சுவாமிகள் பேசத் தொடங்கினார்.

''பயம் போக வேண்டும் என்றால் ஆதித்ய ஹ்ருதயம் படிக்கச் சொல்லுங்கள். அந்த ஸ்லோகத்தைப் படித்தால் மனதில் அச்சம் நீங்கி தைரியம் பிறக்கும். எதற்கும் கலங்காத திடமான மனம் உருவாகும். இலங்கையில் யுத்தம் நடந்த காலகட்டம். ராவணன் அணியிலிருந்த முக்கியமான வீரர்கள் போரில் தோற்றனர். அதைக் கண்கூடாகப் பார்த்தும் கூட ராமருக்குப் பணிய மறுத்தான் ராவணன். சிறையில் இருந்து சீதாதேவியை விடுவிக்கச் சம்மதிக்கவில்லை. ஆக்ரோஷத்தோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.

ஆனால் ராமருக்கு மனதில் சோர்வு எழுந்தது. ''எவ்வளவு நாளாக யுத்தம் நடக்கிறது! இன்னும் இவன் பணியவில்லையே? என்ன தான் வழி?'' எனக் கவலைப்பட்டார். அப்போது வந்த அகத்திய முனிவர், சூரியபகவானைப் பிரார்த்தனை செய்யும் 'ஆதித்ய ஹ்ருதயம்' ஸ்லோகத்தை ராமருக்கு உபதேசம் செய்தார். ராமரும் அதைச் சொல்லி சூரியபகவானை வழிபட்டார். அவ்வளவு தான்...ராமரின் சோர்வு காணாமல் போனது. வீரம் பொங்கியது. மறுநாள் உற்சாகமுடன் போரிட்டு ராவணனை வதம் செய்தார். வால்மீகி ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் இந்தப்பகுதி வருகிறது. துணிவுடன் வாழ விரும்புபவர்கள் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட்டால் போதும். தைரியம் பிறக்கும். வாழ்க்கைப் போரிலும் எளிதாக வெல்ல முடியும்''.

மகாசுவாமிகளின் வழிகாட்டுதல் கேட்ட அன்பரின் மனம் நெகிழ்ந்தது. தினமும் ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மகனைப் பாராயணம் செய்ய சொல்வதாக கூறி மகிழ்ச்சியுடன் விடைபெற்றார்.

சூரிய நமஸ்காரம்

ஞாயிறு அன்று காலை புண்ணிய நதிகளில் குளிப்பதும், சூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரி மந்திரம் சொல்வதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பண்டங்களை தருவதும், செப்பு பாத்திரத்தில் வைத்து கோதுமையை தானம் செய்வதும் (கோதுமை தானம் செய்தால் பார்வை சரியாகும்), சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். அந்நாளில் மறக்காமல் புண்ணிய நதிகளில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்ய கண்களில் உள்ள கோளாறுகள் விலகும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

வேதத்தில் சூரியன்

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாகச் சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக (கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.

வேதத்தின் கண்ணான ஜோதிடத்தில் சூரியன்

கிரகங்களில்   முதன்மையானவர்   சூரியன்.   சூரியனை மையமாக   வைத்துக்கொண்டு அனைத்துக் கிரங்களும் சுற்றுகிறது. சூரியன் தலைமை தாங்கும் தகுதியைத் தருகிறார். ஆண்மையைத்     தருகிறார். நிர்வாகத்திறமை அளிக்கிறார். சூரிய ஒளி அனைவருக்கும் பாகுபாடு இன்றி அளிப்பது போல் எல்லோரையும் சமமாக நினைப்பவர், தயாள தன்மை உடையவர். பேதம் கிடையாது, சாதி  பாகுபாடு கிடையாது. எல்லோரையும் சரி சமமாக நடத்துவர். இரகசியம் கிடையாது. வெளிப்படையாக பேசுவர். வள்ளல் தன்மை உடையவர். இல்லை என்று சொல்லாத தன்மை பேரும் புகழும்  உடையவர்.

களத்திர தோஷம் போக்கும் சூரிய பகவான்

பொதுவாக ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை எனில் களத்திர காரகன் சுக்கிரனையும் ஏழாம் பாவத்தையும்தான் கருத்தில்கொண்டு அனேகர் பார்க்கின்றனர். ஜாதகத்தில் சூரியனின் நிலையும் திருமணத்தை தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை.  

ஒருவர் சிம்ம லக்னம், ராசி மற்றும் இரண்டும் சேர்ந்தோ ஜாதகத்தில் அமையப்பெற்றால் அவர்களுக்கு களத்திர ஸ்தானாதிபதி சனியாக அமைவதால் எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அவ்வாறு நடைபெற்றாலும் சந்தோஷமாக அமைந்துவிடுவதில்லை. மேலும் ஒருவர் ஜாதகத்தில் சூரியனும் சுக்கிரனும் மூன்று பாகை இடைவெளியில் நின்றுவிட்டால் இருதார யோகம், ஆண்மை குறைபாடு போன்றவை ஏற்பட்டுவிடுகின்றன. அதே நேரத்தில் சூரியனும் சுக்கிரனும் 42 பாகை இடைவெளிக்கு மேல் நின்றுவிட்டால் திருமணம் என்பது 95 %  நடைபெறுவதில்லை. விதி விலக்காக நடைபெற்றுவிட்டாலும் பிரிய நேர்ந்துவிடுகிறது. இத்தகைய அமைப்பை பெற்றவர்கள் தங்கள் களத்திர தோஷம் நீங்கவும், இனிய திருமண வாழ்க்கை அமையவும் ஞாயிற்றுக் கிழமைகளில்  சூரிய பகவானை வழிபடுவது கைமேல் பலனளிக்கும் என்பது மிகையாகாது, 

பார்வையருளும் பாஸ்கரன்

ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலைக்கண்ணையும் பன்னிரண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் .

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைக்கண் நோயை ஏற்படுத்தும். 

தோல் நோய் குணமாக்கும் திவாகரன்

கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்குக் காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D-க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும், நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவுப்பெறுவது. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவானை வணங்கி வரத் தொழுநோய் நீங்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அரசு வேலைக் கிடைக்க சூரியன் வழிபாடு

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலைக் கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலைக் கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சனைஸ்வர பகவான் தன் தந்தைக்குப் பாத பூஜை செய்யும் பானு ஸப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் பிரகாசிக்க சூரியன் வழிபாடு

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கிக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியல், அதிகாரம், அந்தஸ்து, கௌரவம், உயர்பதவிகள் ஆகியவற்றைக் குறிக்கும் சூரியன் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் பலமிழந்து நிற்கிறது. மேலும், ஆண்மை, வீரம், பலம், அதிகாரம் ஆகியவற்றைத் தரும் செவ்வாய் பகை வீடான கன்னியில் பலமிழந்து நிற்கின்றது. இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனை வணங்க அரசியலில் அமோக வெற்றி உண்டாகும்.

பித்ரு காரகன் சூரியன்

பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் - வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள். பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர். ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்குச் சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்குப் பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். 

ஆதித்ய ஹ்ருதயம்

சூரிய பகவானை ஜோதிடத்தில் ஆத்ம காரகன் எனச் சிறப்பாக போற்றப்படுகிறது. ஒருவர் ஜாதகத்தில் ஆத்ம காரகனின் நிலை சிறப்பாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு வாழ்வில் நினைப்பதெல்லாம் எளிதில் கைகூடும். சூரியன் ஒருவர் ஜாதகத்தில் நீச நிலையிலோ 6/8/12 தொடர்பிலோ அல்லது ராகு/கேது சேர்க்கை பெற்றோ நின்றுவிட்டால் ஜாதகர் எப்போதும் மனச்சோர்வுடனே காணப்படுவர். 

அத்தகைய நிலையில் மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, உடலுக்கும் சக்தி தரும் அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. ராவணனோடு யுத்தம் செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இத்துதியைப் பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும். ஆபத்துக் காலங்களிலும் எந்தக் கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போதும் இத்துதியை ஜெபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தைப் படிக்க இயலாதவர்கள் சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரரை வணங்கிவர அரசியலில் வெற்றி, அரசாங்க வேலை மற்றும் உயர்பதவி/தலைமை பதவி கிட்டும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com