திருமலையில் வாகன சேவையின்போது இனி பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திருமலையில் வாகன சேவை நடக்கும்போது பஞ்ச வாத்தியங்கள் வாசித்தால் கேட்க மிகவும் இனிமையாக இருப்பதுடன் அருகில் இருக்கும் பக்தர்கள் தேவையற்ற பேச்சுகளை குறைத்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சியின்போது சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக் கொள்ளும் விதமாக இனி பிரம்மோற்சவம், ரத சப்தமி போன்ற விசேஷ உற்சவ நாள்களின் போது நடத்தப்படும் வாகன சேவையின்போது திமிலா, மத்தளம், இலாதலம், இட்டக்கா மற்றும் கொம்பு உள்ளிட்ட பஞ்ச வாத்தியங்கள் இசைக்கப்படும்.
மேலும் இதுவரை தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தேவஸ்தான தொலைக்காட்சியான எஸ்.வி.பி.சி. (ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சானல்) ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வட இந்தியர்களின் வேண்டுகோளை ஏற்று விரைவில் இந்தி மொழியில் தேவஸ்தான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடங்கப்படும் என்றார் அவர்.