திருமலை திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுவதால், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து அதிகாரிகளிடையே மேலும் எதிர்பார்ப்பு மேலோங்கி வருகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த பட்ஜெட் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களால் ஆமோதிக்கப்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும்.
ஆனால் இதுவரை தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்படாத நிலையில், ஆந்திர அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாலான குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்படுவது வாடிக்கை.
ஆனால் தற்போது தேவஸ்தான அறங்காவலர் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளால் ஆன குழு இரண்டும் இதுவரை நியமிக்கப்படவில்லை. கடந்த 6 மாதங்களாக ஆந்திர அரசும் அறங்காவலர் குழுவை நியமனம் செய்வதை தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 2-ஆவது வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளனர்.
ஆனால், அறங்காவலர் குழுவின் சம்மதம் பெறாமல் அதை அதிகாரிகளால் தாக்கல் செய்ய முடியாது. இந்த ஆண்டு தேவஸ்தானத்தின் பட்ஜெட் ரூ. 3,000 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அறங்காவலர் குழு நியமிக்கப்படாத நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு தேவஸ்தான அதிகாரிகளிடையே மேலோங்கியுள்ளது.