காளஹஸ்தி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.இதன் 8-ஆம் நாள் உற்சவம் பிரம்மராத்திரியாக கொண்டாடப்பட்டது.
அதன்படி புதன்கிழமை அதிகாலை லிங்ககோத்பவர் தரிசனம் முடிந்த பின்னர் காலை 6 மணிமுதல் வழக்கம் போல் தரிசனங்கள் தொடங்கின.
காலை 11 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் பெரிய தேரில் காளஹஸ்தீஸ்வரர் சமேத ஞானபிரசுனாம்பிகையும், சிறிய தேரில் பராசக்தி அம்மனும் மாடவீதிகளில் வலம் வந்தனர். தேரோட்டத்தின்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரவு 8 மணிக்கு தெப்போற்சவம் நடைபெற்றது. கோயிலிருந்து சற்று தள்ளியுள்ள திருக்குளத்தில் காளஹஸ்தீஸ்வரர், ஞானபிரசுனாம்பிகை தாயார் பெரிய தெப்பத்திலும், பராசக்தி அம்மன் சின்ன தெப்பத்திலும் வலம் வந்தனர்.
தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளக்கரையில் கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூர்த்திகளை கண்டு வழிபட்டனர்.
இதையொட்டி திருக்குளமும், தெப்பமும் மலர்களாலும் மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது.