கர்நாடகத்தில் சரவணபெலகோலாவில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலங்களில் ஒன்றான பாகுபலி தலத்தில் மகாமஸ்தகாபிஷேக விழா இன்று தொடங்கியது.
இந்த விழாவுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். மகாமஸ்தகாஷேக விழா மகா கும்பமேளாவைப் போல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அரிய விழாவாகும்.
இந்த விழாவைத் தொடங்குவதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் கடந்த 7-ம் தேதி தொடங்கிவிட்டது. அதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றிருந்தார்.
இதுகுறித்து ஜெயின் மதத் தலைவர் சாருகிரிதி பட்டாரக் ஸ்வாமி கூறியதாவது:
மகாமஸ்தகாபிஷேக விழாவில் சுமார் 30 லட்சம் முதல் 40 லட்சம் பக்தர்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தீர்த்தங்கரரான ஆதிநாத்தின் மகன் பாகுபலியின் 57 அடி உயர சிலைக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய சிலை ஆகும்.
மகாமஸ்தகாபிஷேகம், கி.பி.981-ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டும்வரும் விழாவாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விழா தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. அபிஷேகத்துக்கு 1,008 குடங்களில் பக்தர்களால் கொண்டு வரப்படும் தீர்த்தங்கள் பயன்படுத்தப்படும். அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் குழுமியிருக்கும் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். பால், கரும்புச்சாறு, குங்குமப்பூ பேஸ்ட், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு பாகுபலி சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாமஸ்தகாபிஷேக விழாவின் கடைசி நாளில், ஹெலிகாப்டரில் இருந்து பூக்கள் தூவப்பட்டன என்றார் சாருகிருதி பட்டாரக் ஸ்வாமி.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பாதுகாப்புக்காக சுமார் 5,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பக்தர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய 12 தாற்காலிக நகரியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.