திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவானது மார்ச் 2 வரை நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது.
பன்னிரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக தினமும் ஒரு வாகனத்தில் இரு வேளைகளிலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த வகையில், இந்த வருடத்திற்கான பிரம்மோற்சவ விழா இன்று இரவு தொடங்குகிறது.
நாளை காலை 6 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறும். பிப்.,27-ம் தேதி வள்ளி திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது. மாசி மாத பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.