அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..!

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம்சுருளிமலையில் உள்ளது.
அதிசய கோயில்: இலை, தழைகள் பாறைகளாக மாறும் விடைதெரியாத மர்மம்..!

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் பல அதிசய நிகழ்வுகளுக்கு விடை தேடிக்கொண்டு இருக்கின்றன. அப்படியொரு விடைதெரியாத அதிசயம்
சுருளிமலையில் உள்ளது.

அந்த காலத்தில் கோயில் கட்டும் போது ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றைத் தனித்தன்மையுடன் அமைத்துள்ளனர். அந்தவகையில் இந்த முருகன் கோயிலுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு!

தேனி மாவட்டம், கம்பம் அருகில், சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சுருளி அருவி. மேற்குத்தொடர்ச்சி மலையின் சுருளிமலையில் அருள்மிகு சுருளிவேலப்பர் கோயில் கொண்டுள்ளார். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இங்கு சுருளிவேலப்பர் மூலவராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். 

பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளும், பதினெண் சித்தர்களும் தவம் புரிந்து அருள்பாலிக்கும் அற்புதமான மலை இது. சுருளி அருவியான பல மூலிகைகள் பட்டு மருத்துவ குணங்களுடன் வெள்ளியை இறைத்தது போல் கொட்டுவதால் இதற்கு சுருளி தீர்த்தம் என்று பெயர். பழனி முருகனின் நவபாசான சிலையை உருவாக்கிய போகர் சித்தர் தனது இறுதி மூலிகையை இந்த மலையில் இருந்து தான் எடுத்ததாகக் கூறப்படுகிறது. அவரின் குருநாதர் காலாங்கி சித்தர் பன்னெடுங்காலம் தவம் செய்த பூமி இது. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளதாகவும் இன்றும் பல சித்தர்கள், ரிஷிகள், தவமிருப்பதாகவும் நம்பப்படுகிறது. 

அப்படிப்பட்ட குகைக்கோயிலில் தான் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். அங்குள்ள விபூதிக் குகையில் என்ன சிறப்பு என்றால், அங்கிருக்கும் ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுகிறதாம். இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிக்கிறது. 48 நாட்களில் இந்நீரில் விழும் இலை, தழைகள் பாறை போல மாறுமாம். பாறை மீது நீர் விழுந்தாலும் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இந்தக் கோயில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்றுநீர் பொங்கி வந்து கொண்டிருப்பது அதிசயமாகும். 

இங்குப் பிரதானமாக வீற்றிருக்கும் சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்ற குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. 

இங்கு ஒருவர் மட்டும் படுத்துக்கொண்டு போகக்கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. தரையில் தண்ணீர் எப்போதும் வடிந்துகொண்டே இருக்குமாம். இந்தக் குகைக்குள் ஒருவர் ஒருமுறை சென்று வந்தால் நாம் எடுக்கவேண்டிய பிறவிகளில் ஒன்று குறைவதாக ஐதீகம். 

சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம். 

துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் சதுரகிரி மலை அடிவாரத்தில் தபோவனம் என்னும் மாவூற்றில் யாகங்கள் யக்ஞங்கள் வளர்த்து இறைவனை நோக்கித் தவம் செய்தார்கள். அத்தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர் ரிஷிகளுக்கு தேவலோக வாழ்வைக் கொடுத்து தாமும் மகாலிங்க சொரூபமாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலையில் மூலவராகிய மகாலிங்கம். இமயகிரி சித்தர் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கேயே சில காலம் தவம் செய்தாக கூறப்படுகிறது. 

இங்குள்ள குகையில் சிவபெருமான் நுழைந்ததால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பான குகை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இங்கு சர்ப்ப குகை, கிருஷ்ணன் குகை, கன்னிமார் குகை என முக்கியமான குகைகளைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்கின்றனர்.

ஆடிப்பூரம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என விழாக்கள் அதிகம் இருந்தாலும், தைப்பூசத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தநாளில் காவடி எடுத்து, பால் குடம் ஏந்தி வழிபட்டால், நினைத்த காரியம் அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் சுருளி வேலப்பர் என்கின்றனர். 

ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை ஆகிய நாட்களின்போது, இங்கு வந்து அன்னதானம் வழங்கினால், முன்னோரின் ஆசீர்வாதமும் முருகக்கடவுளின் பேரருளும் கிடைக்கும் என்பது உறுதி!

மேலும் இங்கு உள்ள கையிலாச குகைக்கு பெளர்ணமி நாளில் பாதயாத்திரையாக வந்து தரிசித்தால், சிவனாரின் அருளும் கிட்டும் என்பது ஐதீகம். வனம் மற்றும் மலைப் பகுதியில் உள்ள ஆலயம் என்பதால், காலை 7 மணிக்குத் துவங்கி மதியம் 2 மணிக்கு நடை சார்த்தப்படுகிறது. முக்கியமான நாட்களில், இரவு 8 மணி வரை நடை திறந்திருக்குமாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com