திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா 2ஆம் நாளை முன்னிட்டு, சுவாமி குமரவிடங்கப்பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடயச் சப்பரத்திலும் வீதியுலா வந்தனர்.
இக்கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாளில் சுவாமியும், அம்பாளும் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறும். 2ஆம் திருவிழாவான புதன்கிழமை காலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் சிங்க கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, அருள்மிகு தூண்டுகை விநாயகர் கோயில் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரி ஆண்டியப்ப பிள்ளை மண்டபத்தில் சேர்ந்தனர். தொடர்ந்து, அம்மன் மட்டும் எட்டு வீதிகளிலும் உலா வந்து மண்டபம் சேர்ந்தார்.
இரவில் மண்டபத்திலிருந்து சுவாமி குமரவிடங்கப் பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், தெய்வானை அம்மன் பெரிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, மேலக்கோயில் சேர்ந்தனர்.
3ஆம் திருநாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு மேலக்கோயிலிலிருந்து சுவாமி சிங்க கேடயச் சப்பரத்திலும், அம்மன் பெரிய பல்லக்கிலும் வீதியுலா, மாலையில் மேலக்கோயிலிலிருந்து சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் வீதியுலா வருதல் நடைபெறும்.