ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு, திருக்கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து உதயமார்த்தாண்ட தீபாராதனை, திருப்பள்ளி எழுச்சி, கால சந்தி தீபாராதனை, உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சாயரட்சை தீபாராதனை, இராக்கால அபிஷேகம், இரவு இராக்கால தீபாராதனை, ஏகாந்த தீபாராதனை மற்றும் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, கோயில் நடை திறந்தவுடன் சுவாமி தரிசனம் செய்தனர். திங்கள்கிழமை அதிகாலை முதல் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதனால் திருக்கோயில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர், கோயில் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல்படையினர் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பா.பாரதி, அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.