வேட்டவலம் மலை மீதுள்ள புனித சூசையப்பர் ஆலய ஆண்டுப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான பெருவிழா கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆலயத்தில் திருப்பலிப் பூஜைகள் நடைபெற்று வந்தன.
நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு பாதிரியார் ஜோ.லூர்துசாமி தலைமையில், அருளப்பன், ராஜரத்தினம் உள்பட 20-க்கும் மேற்பட்ட குருமார்கள் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி பாடல் பூஜைகளை நடத்தினர்.
காலை 9 மணிக்கு உறங்கும் நிலை புனித சூசையப்பர் சொரூபம் திறந்து வைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு புனித சூசையப்பர் தேர் பவனி கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவ சமுதாயத் தலைவர் சவரிமுத்து, சூசையப்பர் பேரவைத் தலைவர் மைக்கேல், செயலர் துரை.அந்தோனிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.