நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி (கூடாரை வெல்லும்) சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட 108 வைணவத் தலங்களுள் 19 -ஆவது தலமாக, நாகை அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் கோயில் விளங்குகிறது. வைணவத் தலங்களில் மார்கழி மாத முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக நடைபெறும் கூடாரவல்லி விழா இக்கோயிலில் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீஆண்டாள், திருப்பாவையின் 27 -ஆவது பாசுரமான 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரத்தைப் பாடியபோது, ஆண்டாளுக்கு திருமண வரம் அளித்த பெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி, செளந்தர்ய மகாலெட்சுமி தாயாருடன் ஏக சிம்மாசனத்தில் காட்சியளித்தார் என்ற ஐதீக அடிப்படையில் இந்த விழா நடைபெற்றது.
ஸ்ரீஆண்டாளின், 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரம் பாடப்பட்டு, ஸ்ரீ ஆண்டாள் சர்க்கரைப் பொங்கலில் சிறப்பாக நெய் கலந்து பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் என்ற ஐதீக அடிப்படையில், மிகுதியாக நெய்யிடப்பட்ட சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அருள்மிகு செளந்தரராஜப் பெருமாள் செளந்தர்யவல்லித் தாயார், ஆண்டாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஏக சிம்மாசனத்தில் முத்தங்கியில் சேவை சாதித்தார். நாகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.