வீரராகவர் கோயில் தை பிரம்மோற்சவம் இன்று தொடக்கம்
வீரராகவ சுவாமி கோயிலில் தை பிரம்மோற்சவம் சனிக்கிழமை (ஜனவரி-13) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ சுவாமி கோயிலில் தை பிரம்மோற்சவம் 13-ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முதல் நாள் காலை 7.15 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் வலம் வருதலும் நடைபெற இருக்கிறது.
இதேபோல், 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஹம்ஸ வாகனத்திலும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் , 15-ஆம் தேதி காலை 5 மணிக்கு கருட சேவை வாகனத்திலும், இரவில் 8.30 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வலம் வருகிறார்.
தொடர்ந்து, 16-ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையும், மாலை 4.30 மணிக்கு சுவாமி சேஷ வாகனத்திலும், இரவு 10 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இதேபோல், 17-ஆம் தேதி காலை 5 மணிக்கு நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு 7 மணிக்கு யாளி வாகனத்திலும் வலம் வருதல் . 18-ஆம் தேதி சொர்ணாபிஷேகம் மற்றும் வேணுகோபாலன் திருக்கோலத்தில் காலை 6.30 மணிக்கு வெள்ளிச் சப்பரத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் வலம் வருதல். 19-ஆம் தேதி காலை 5.15 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதல், மாலை 7.30 மணிக்கு திருமஞ்சனம் பின்னர் இரவு 10 மணிக்கு திருக்கோயிலுக்கு எழுந்தருளல்.
20-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சனம். இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல். 21-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு , 10 மணிக்கு தீர்த்தவாரி. இரவு 7.30 மணிக்கு விஜயக்கொடி விமானம் வலம் வருதல் மற்றும் 10 மணிக்கு திருமொழி சாற்றுமறையும், ரத்னாங்கி சேவையும் நடைபெற உள்ளது.
இதில் நிறைவாக 22-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு த்வாதச ஆராதனம், இரவு 8 மணிக்கு வெட்டிவேர் சப்பரம் வலம் வரும் நிகழ்ச்சியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால், தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.