ஆந்திரத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தனது சொந்தக் கிராமமான சித்தூர் மாவட்டத்தில் உள்ள நாராவாரிபள்ளிக்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்பட குடும்பத்தினருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சனிக்கிழமை வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை அவர் ஏழுமலையான் கோயிலில் குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.
கோயிலை விட்டு வெளியில் வந்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திர தலைநகர் அமராவதி நிர்மாணம், போலவரம் நீர்திட்டம், நதிகள் இணைப்பு என பல திட்டப்பணிகள் ஆந்திரத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மக்களுக்கு சிறந்த வாழ்வாதார முறைகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து ஆந்திரத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக விரைவில் மாற்றுவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் சொந்த கிராமத்திற்கு சென்ற அவர், ஞாயிற்றுக்கிழமை மாலை தெருவில் நடந்து சென்று உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் வீடுகளுக்கும் சென்று உரையாடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தார்.